June 27, 2007

ஊஊஊஊவ்! சோசலிசம்!! (SiCKO பற்றிய குறிப்பு)

"அரச சேவை" மீதான வெறுப்புணர்வும் விமர்சனங்களும் நன்றாகப் பரவி இறுகிப்போயிருக்கும் காலம் இது.

அரச சேவை என்றாலே சோம்பேறித்தனமும் படிநிலை அதிகாரங்களும் கொண்ட கையாலாகாத நிறுவனம் என்ற பதிவு எல்லார் மனதிலும் அழுத்தமாய்ப் படிந்திருக்கும் காலம் இது.

இலங்கைச்சூழல் தொடர்ச்சியாகத் திட்டமிட்டு வலுவிழக்கச்செய்யப்படும் அரச சேவையும், ஒரே சேவையை அரசும் தனியாரும் போட்டி போட்டுச் செய்ய வேண்டும் என்ற கபடத்தனமான உலக மயமாக்கல் விளம்பரங்களும் புதியவையல்ல.

"அரச சேவை" என்கிற கருத்தியல் ஒரே நேரத்தில் மார்க்சீயர்களாலும், ஏகாதிபத்தியவாதிகளாலும் தாக்கபப்டுகிறது.

இலங்கையில் அரச சேவை என்றாலே இனவாதம் அழுகிப் புழுத்த, அடை காக்கப்பட்ட பெருங்குகையாகவே மனங்களில் படிமம் கொள்கிறது.

"அரசுடைமையாக்கல் சோசலிசத்துக்கு" எதிராக தீவிர இடது சாரிகள் கூர்மையான விம்சனங்களை முன்வைக்கிறார்கள். அவர்கள் விமர்சனங்கள் உடன்படக்கூடியவையே.

--

<வளவளா>

பின்-முதலாளியத்துடன் உடன்பாடுகண்டவர்கள் தனியார் மயமாக்கலை தூக்கிப்பிடித்து மரபான சோசலிச ஒற்றைப்படைச் சிந்தனை முறையைத் தகர்க்கும் நவீன சிந்தனையாக நம்பவைத்து வருகின்றனர்.

இந்த தாராளவாத தனியார் மயமாக்கல் எனும் மதம் தொடர்ச்சியாகக் கவர்ச்சிகரமாகப்போதிக்கப்படுகிறது.

அதன் புனிதப் பூமியாக அமெரிக்கா மறுபடி மறுபடிக் கட்டமைக்கப்படுகிறது.


தூசிபடிந்த மரத்தளபாட மேசைகளும்

மெதுவான தூங்கும் ஊழியர்களும்

அதிகாரப் படிநிலையாக்கமும், முத்திரை ஒட்டல்களும்

வரிசைக்காத்திருப்புக்களுமாக
விரியும்

அரசுடைமையாக்கல் படத்தின் மீது

"தொம்"

என்று வந்து தூசி பறக்க விழுந்திருக்கிறது

"SiCKO".


<வளவளா முடிவு> ;-)

-1-

மைக்கல் மூர் இயக்கி, வெளியாக முன்னமே பிட்டொரென்ட் தளங்களில் தரவிறக்க வந்துவிட்ட ஒரு ஆவணப்படம்தான் SiCKO.


இந்தப்படம் எதைப்பற்றிப் பேசுகிறது?

மருத்துவக்காப்புறுதி செய்ய வழியில்லாத ஒருவர் காயப்பட்ட தனது காலைத் தானே இழை போட்டுத் தைத்துக்கொள்கிறார்.
"இந்தப்படம் இவரைப்பற்றியது அல்ல."

இன்னொருவர் இரண்டு விரல்கள் வெட்டுண்ட நிலையில், காசில்லாமல் ஒரு விரலை மட்டும் பொருத்திக்கொள்கிறார்.
"இந்தப்படம் இவரைப்பற்றிய கதையும் அல்ல."

50 மில்லியன் அமெரிக்கர்களிடம் மருத்துவக் காப்புறுதி கிடையாது. இவர்களில் 18,000 பேர் இந்த வருடம் இறப்பர். காப்புறுதி செய்யாத ஒரே காரணத்துக்காக.
"ஆனால் இந்தப்படம் இவர்களைப்பற்றியதுகூட அல்ல. "

"இது மருத்துவக் காப்புறுதி செய்துகொண்ட 250 மில்லியன் இயல்பான அமெரிக்கக் கனவோடு வாழும் மக்களைப்பற்றியது. "


-2-

மருத்துவக் காப்புறுதி என்கிற மாய்மாலத்தின் அட்டகாசமான அமெரிக்கனிச விளம்பரப்படுத்தல்களின் மீது தொடர்ச்சியாகக் கேள்வி கேட்டபடி நகர்கிறது இப்படம்.

காப்புறுதியால் விளையும் நன்மைகள் பற்றிய கவர்ச்சிகளின் மேல் தமது சொந்த அனுபவத்தைச்சொல்லி அழுதும், எள்ளியும் கேள்விகேட்கிறார்கள் படத்தில் வருபவர்கள்.

வலுவான காரணங்களால் காப்புறுதி மறுக்கப்பட்டவர்களின் அவலக்கதைகளை கேட்கிறோம்.

பின்னர்,
வலுக்குறைந்த, சில்லறைக்காரணங்களால் காப்புறுதி மறுக்கப்பட்டவர்களின் கதை கேட்டு அதிர்கிறோம்.

அடுத்து காப்புறுதியை மறுத்தல் காப்புறுதி நிறுவனங்களில் லாபமீட்டும் நற்செயலாகக்கொண்டாடப்படுவதைப் போட்டுடைக்கும் காப்புறுதி நிறுவனங்களின் ஊழியர்களது சாட்சியங்களோடு அரசியல் அதிர்ச்சியைப் பெறுகிறோம்.

காப்புறுதி நிறுவனங்களினதும் மருத்துவ முதலாளிகளினதும் மாயவலைக்குள் சிக்கி அவரகளது கொள்ளை லாபமீட்டலுக்காக அமெரிக்க மக்கள் எப்படி எல்லாம் பலியெடுக்கப்படுகிறார்கள் என்ற அதிர்ச்சிக்கதைகளோடு இந்த நிலையின் அடிப்படை அரசியல் என்ன என்ற கேள்வியை எம்முள் கிளர்த்தி

முதலாளிய அமைப்பின் மீதான தனது விமரிசனப்பார்வையை எமக்கு அறிமுகப்படுத்துகிறார் மைக்கல் மூர்.

-3-


இந்தக் காப்புறுதி எனும் அநியாயம் எங்கே தொடங்கியது என்ற கேள்வியோடு அதற்குப்பதிலாக வரும் நிக்சனின் உரையாடல் அடங்கிய ஒலிநாடாப்பதிவு எல்லாவற்றுக்கும் பதில் சொல்கிறது.

ஒரு தனிமனித முதலாளிக்காக, அவனது லாபத்துக்காக இந்த முறையை நிக்சன் அமெரிக்க மக்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார்.


அரச வைத்தியசாலைகள் வலிந்து வலுவிழக்கச்செய்யபப்டுகின்றன. வலுவிழந்த அரச மருத்துவத்தின் தோல்விகள் ஊடகத்தின் மூலம் பரப்புரை செய்யப்படுகின்றது.

இலங்கை இந்தியச் சூழலிலும் இதுவே இன்று நடக்கிறது.
எல்லாத்தொழில், சேவைத் துறைகளிலும்.

இந்த சதிவலைப்பின்னலின் கடந்த காலத்தைப் படத்தில் பார்க்கும் நாங்கள், அது நிகழ்காலத்தில் நடக்கும் நாடுகளில் வாழ்கிறோம் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.

இந்த தொடர்புபடுத்தும் சிந்தனையாற்றல் இல்லாவிட்டால் இந்தப்படம் எதையும் சாதிக்காது.


"எவ்வளவுக்கெவ்வளவு அரச வைத்தியசாலைகள் தோல்வியடைகின்றனவோ, அவ்வளவுக்கவ்வளவு காப்புறுதி முதலாளிகளுக்கும் மருத்துவ முதலாளிகளுக்கும் லாபம்."


மருத்துவக்காப்புறுதி என்கிற மென்வலைப்பின்னல் மருத்துவ முதலாளிகளின் நிரந்த லாபப்பெருக்கத்துக்கான பெரும் சுரண்டல் கருவியாக அம்பலப்படுத்தப்படுகிறது.

ஹிலரி கிளிங்கடனின் முயற்சியால் மறுவுருவாக்கம் செய்யப்படவிருந்த சமூக மயமான வைத்தியம் என்ற எண்ணக்கரு இந்த முதலாளிகளின் சதிவலைப்பின்னலை ஆட்டங்காணச்செய்யவே, "அமெரிக்க முதலாளிக் குணம்" அழகாக வெளிப்படுகிறது .

( இதில் ஹிலரியை தேவதையாக்கும் மைக்கல் மூரின் அரசியல் கேள்விக்குட்படுத்தப்பட வேண்டியது. அம்பலப்படுத்தப்படவேண்டியதுமாகும்)


அதிகாரப்படிநிலையாக்கம் என்கிற அதே பழைய பல்லவி எல்லாப் புல்லாங்குழல்களாலும் இசைக்கப்படுகிறது.
சோசலிசம் என்கிற பெரும் பிசாசு பற்றிய புனைகதைகளும் பரப்பப்படுகின்றன.

ரெனால்ட் ரேகன் அரசுடைமையான மருத்துவத்துக்கெதிராகப் பரப்புரைக் கருவியாக இயங்குகிறார்.

ஹிலரியின் முயற்சிகளுக்கெல்லாம் வெள்ளைமாளிகை தொடர்ச்சியாக் முட்டுக்கட்டை போடுகிறது.

இதற்கு எவரெவர் எவ்வளவு லஞ்சம் வாங்கினார்கள், புஷ் உட்பட அத்தனை செனட்டர்களும் எவ்வளவு கையூட்டுப்பெற்றார்கள் என்றெல்லாம் புள்ளிவிபரம் சொல்லி அசத்துகிறார் மூர்.

வெள்ளை மாளிகை ஒரு சில முதலாளிகளால் இயக்கப்படும் நிறுவனம் என்கிற உண்மையை எமக்கெல்லாம் உரத்துச்சொல்கிறார்.

-4-

ஜோர்ஜ் புஷ் சீனியர் ஜனாதிபதியாக இருந்தபோது பேசும் ஒளிப்படம் ஒன்று காண்பிக்கப்படுகிறது.
"சோசலைஸ்ட் மருத்துவம் நன்மையானதென நீங்கள் கருதினால், ஒரு கனேடியனிடம் போய்க் கேட்டுப்பாருங்கள்!"

கேட்டுப்பார்க்கிறார் மூர்.

அமெரிக்க மருத்துவம் என்றாலே அச்சவுணர்வை வெளிப்படுத்துகின்றனர் அனைவரும்.

படம் எல்லா நாட்டு சுகாதார அமைப்பு முறைமையையும் ஆய்வு செய்கிறது.

லண்டனில், பாரீசில் எங்குமே அமெரிக்கா போன்றதொரு கெடுதியான சுகாதார அமைப்பு முறை காணப்படவில்லை.

அமெரிக்க முறையை சொல்லும்போதெல்லாம் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள் மற்ற நாட்டுக்காரர்கள்.

-5-

எங்குதான் அமெரிக்காவில் இலவச மருத்துவம் கிடைக்கும் என்று தேடிப்பார்த்ததில் மூருக்கு நம்பிகையூட்டும் பதில் கிடைக்கிறது.

கியூபாவின் குவாத்தனாமோ குடாவில் அமைந்திருக்கும் அமெரிக்க சிறைக்கூடத்தில் மட்டும்தான் அமெரிக்காவிலேயே இலவச மருத்துவம் வழங்கப்படுகிறது என்ற செய்தி.

தன்னோடு 9/11 மீட்புப்பணியாளர்களான சில நோயாளிகளை அழைத்துகொண்டு அங்கே சென்று மருத்துவ உதவி கேட்கப்போகிறார் மூர்.

அது தோல்வியில் முடியவே வேறு வழியில்லாமல் கியூபாவுக்குள் போய் விடுகிறார்கள்.


-6-

இந்தப்படத்தில் கியூபாவை உள்வாங்கியிருக்கும் விதம் ஆர்வமூட்டக்கூடியது.

எல்லா மேற்கு நாடுகளுக்கும் பயணம் போகும் மைக்கல் மூர், அங்குள்ள சுகாதார அமைப்பு முறைமையை ஆய்வு செய்துவிட்டு கியூபாவிற்கு வந்து தனது படத்தின் "நீதியை" சொல்ல முயன்றிருக்கிறார்.

மற்ற மேற்கு நாடுகளிலெல்லாம் முதலாளியத்தோடு உடன்பாடுகண்ட அரசாங்கங்களே ஆட்சியிலிருக்கின்றன.

அவை எல்லாம் முதலாம் உலக நாடுகள். பெரும் மூலதனச் செழுமை கொண்டவை.
அரசு ஒரு பெரிய சுகாதாரச்சேவையை நிறுவன ரீதியாக வழங்குவதில் சிக்கல்கள் பெரிதாக இருக்கமுடியாது.

வரியும் தாராளமாகக்கிடைக்கும்.


இடையீடு --> இப்படத்தில் லண்டனில் ஒரு புத்திஜீவி "socialized medicine" என்பதை ஜனநாயகக்கூறாக மட்டுப்படுத்திக் கதைக்கிறார். கனடாவின் பழமைவாதக்கட்சி ஆதரவாளர் அமெரிக்க மருத்துவ முறைய விமர்சிக்கிறார். -->

ஆனால் கியூபா அப்படி அல்ல.

அது ஒரு வறிய நாடு. கம்யூனிச நாடு.
அமெரிக்காவின் உளுத்துப்போன அமைப்பொன்றுக்கு மாற்றாக காட்டப்படும் எடுத்துக்காட்டு, கம்யூனிசப் பேயினுடையது.

அமெரிக்காவின் தொடர்ச்சியான மருந்துப்பொருட்களுக்கான தடை, அத்தியாவசியப்பொருட்கள் மீதான தடை எல்லாவற்றையும் மீறி எழுந்து நிமிர்ந்து நிற்கும் அந்த ஹவானா வைத்தியசாலைக்கட்டடமும், மருந்துவிலையை விசாரித்துவிட்டு அமெரிக்காவில் நூற்றுகணக்கான டொலர்கள் விற்கும் மருந்து கியூபாவில் ஐம்பது சதம் மட்டுமே எம்பதை அறிந்து

" It's like a biggest insult. it doesn't make any sence"

என்று கதறியழும் அமெரிக்கப்பெண்மணியின் வார்த்தைகளும், செத்துப்போன கம்யூனிசம் பற்றிய இன்றைய கதைத்தோரணங்களை எல்லாம் கேள்விகேட்கிறது.

சே குவாராவின் மகளது வார்த்தைகள் வலிமை மிக்கன.


மைக்கல் மூர் அடிப்படையில் கம்யூனிச சித்தாந்தங்களுக்கு எதிரானவர், முக்கியமாக கியூபா தொடர்பான கடுமையான அமெரிக்க நிலை விமர்சனங்களை முன்வைப்பவர் என்ற கருத்து உண்டு. ( இதை நிறுவும் கட்டுரை ஒன்றினை தேடிப்பார்த்தேன். கிடைக்கவில்லை. அதனால் மேற்கோள்கள் தர முடியவில்லை)

ஆனால், முதலாளியத்தின் நியாயப்படுத்தல்களை ஒரு கட்டத்துக்கு மேல் செய்ய லாயக்கற்றவர்களாக, முதலாளிய உடன்பாட்டாளர்களையே தள்ளிவிடும் லாபப்பெருக்க அநியாயத்துக்கெதிராக முன்வைக்கக்கூடிய வேலைத்திட்டமாக இன்று வரைக்கும் மார்க்ஸ்-ஏங்கல்ஸ்-லெனின் சிந்தனை அடிப்படையைத்தவிர வேறெதுவுமே இல்லை என்கிற வலிய உண்மையை கியூபாவிடம் வந்து சேர்ந்த மைக்கல் மூரின் இக்கட்டான சூழநிலை தெளிவாக விளங்கப்படுத்திவிடுகிறது.


ஆனால் இதனை மைக்கல் மூரோ இந்தப்படமோ ஒப்புக்கொள்ளப்போவதில்லை என்பதில்தான் இப்படத்தின் அரசியல் இருக்கிறது.

-7-

முதலாளியம் மீதும், அமெரிக்கனியம் மீதும் விமர்சனங்களைக் கடுமையாக முன்வைத்து அதற்குப் பதிலீடாகச் சிறிய ஒட்டு வேலையைப் பரிந்துரைத்துப் படத்தை முடிப்பதன் மூலம் முதலாளியக்கட்டமைப்பைப் பேணும் தனது அகச்சார்பை நிலைப்படுத்துவதையே மைக்கல்மூரின் அண்மைய படங்களின் அரசியல் என நான் பார்க்கிறேன்.
(Roger and me எனக்கு பார்க்கக்கிடைக்கவில்லை)

ஒரு வேளை அப்படி இல்லாமலுமிருக்கலாம்.

-8-

இந்தப்படத்தை இலங்கை இந்திய நிலை அரசியல் சூழலின் அடிப்படையில் பார்த்தல் ஆரோக்கியமானது.

எந்த அமைப்புமுறையை அமெரிக்காவும் ஏகாதிபத்தியமும் எம்மீது திணிக்க தம்மாலான எல்லாக் கவர்ச்சிகரமான விளம்பரங்களையும் செய்கிறதோ, அந்த அமைப்பு முறையின் வளர்ந்த வடிவத்தின் அபாயத்தினை இப்படம் காட்டுகிறது.

எம்மைச்சுற்றிப் பின்னப்படும் சதிவலையின் செல்திசையை இப்படம் எமக்கு உணர்த்த வேண்டும்.

ஒரு சிறு எடுத்துக்காட்டான அமெரிக்க மருத்துவ அமைப்பு என்பதைத்தொட்டு அமெரிக்க முறைமையின் முழுமையையும் விமர்சிக்கும் பார்வையை இப்படம் வழங்கக்கூடும் என எதிர்பார்க்கிறேன்.

-9-

இந்தப்படம் தனக்கான அரசியல்களுடன் வந்திருக்கும் சிறு அரசியற்செய்தி.
அதைத்தொட்டு வளரும் எமது பார்வையே முக்கியமானது.

"அனைவருக்குமான இலவச மருத்துவம்" எனக் குறுகிப்போகும் இப்படத்தின் "முடிவு" க்குள் நாமும் சிக்கி முடங்கிப்போவோமானால், அப்படியான ஒரு முடக்கத்தை இது உருவாக்குமானால், இப்படம் எமக்கு எந்த நன்மையையும் தரப்போவதில்லை.

இந்த எச்சரிக்கையை மைக்கல் மூரின் முன்னைய படமான fahrenheit 9/11 தனது அரசியலூடாகத் தருகிறது.

-10-

சொருகல் 1

இப்படத்தில் பெரிதாகப் பேசப்படாத "காப்புறுதி எடுக்க வழியற்றவர்கள்" பெரும்பாலும் அமெரிக்கக் கறுப்பினத்தவர்.

மூர் இவர்களை வசதியாக ஒதுக்கவில்லை. பல பொருத்தமான இடங்களில் வெள்ளை-கருப்பு வித்தியாசத்தின் வன்முறை காட்டப்படுகிறது.
கதையின் நிகழ்களம் இவர்கள் படத்தினுள் அதிகம் பேசப்பட வாய்ப்பில்லாமற்செய்துவிட்டது.

சொருகல் 2


இத்தகைய படங்கள் அமெரிக்க மாயைக்குள் போதையூட்டப்பட்டிருக்கும் பார்வையாளர்கள் மட்டத்தில் சிறு சலனத்தையும் அதிர்ச்சியையும் உண்டுபண்ணும் என்பதில் சந்தேகமில்லை.

இந்தக்காலத்தேவை இத்தகைய படங்களின் அரசியற்சாய்வுகளை விமர்சனத்தோடு ஏற்றுக்கொள்ள வைத்துவிடுகிறது.


சொருகல் 3


" கழிப்பறைக்கதவைத்தட்டி என்ன செய்கிறாய் என்று கேட்டேன். பதிலில்லை. திறந்து உள்ளே போனால் அவன் அழுதுகொண்டிருந்தான். இந்த உலகில் எதை வேணுமானாலும் விட்டுப்போவதில் எனக்கு பிரச்சினை இல்லை. உன்னை விட்டுப்போக முடியாது ட்ரேசி!"



என்று அந்த பெண்மணி தன் துணைவனின் கூற்றாக நினைவுகூரும் காட்சி கண்ணீர் வரவழைத்தது.

சொருகல் 4


இப்படம் கொள்ளையடிக்கப்பட்டு பிட்டொரென்ட் வழியாக வெளிவந்தமை பற்றி மூர் கூறிய கருத்துக்கள் ஆர்வமூட்டின.


காப்புரிமை, புலமைச்சொத்து என்பவற்றின் வன்முறை, சுயநலத்தன்மை போன்றவற்றை க்கேள்விக்குட்படுத்தும் இன்றைய சூழலில்

காப்புரிமைச்சட்டங்கள் கலைஞர்களைக் காப்பற்றவில்லை. மாறாக பெரு நிறுவனங்களின் லாபப்பெருக்கத்துக்கே உதவி செய்கின்றன என்ற ஹொலிவூட் நட்சத்திரமான மூரின் கருத்து அருமை.

கவனியுங்கள்.

சொருகல் 5


இப்படத்தைன் "கொள்ளையடிக்கப்பட்ட" நகலைத் தரவிறக்க.


சொருகல் 6

June 26, 2007

ஒரு கொழும்புப்புகைவண்டியில் திரையிட்ட குறும்படம்

[11/26/2004 அன்று வலைபதிந்த குறிப்பு இது. காணாமற்போய் இன்றைக்குத்தான் கண்டுபிடித்தெடுத்தேன். "ம்..." இல் இதை மறுபடி சேர்க்குமுகமாகவே இந்த மீள்பதிவு.]

அம்மாவின் ஆசிரியத்தொழிலின் தயவில் எனக்கு இரண்டாம்வகுப்பு உறங்கலிருக்கை பயணம் சிலவேளைகளில் இலவசமாக கிடைப்பதுண்டு.

அப்படியானதொரு இலவச இரண்டாம்வகுப்பு கொழும்புப்பயணத்தின் போது என்னிரு நண்பர்களை ஒரே பெட்டியில் சந்தித்தேன்

சில மாதங்களுக்குமுன்.

ஒருவர் சமூக செயற்பாட்டாளர்.
இன்னொருவர் நாடகத்துறை கலைஞர், செயற்பாட்டாளர்

அப்பால் தமிழ் வலைத்தளம் பற்றி நான் பேசிக்கொண்டிருந்தபோது நாடகத்துறை நண்பர், திருக்கோணமலையில் குறும்படங்கள் ஏதாவது எடுத்து திருப்தி பெற்றுக்கொள்ள முடியுமா என்ற பரப்பில் பேச ஆரம்பித்தார். (இக்கனவினை சாத்தியமாக்கும் வல்லமை அவருக்கு உண்டு. விளைபொருள் எப்ப வரும் என்றுதான் தெரியவில்லை)

தன்னிடம் ஒரு நல்ல கதைக்கரு இருப்பதாகவும் , அதனையே குறும்படமாக்கினால் என்ன என்றும் கேட்டார்.
நாமிருவரும் சேர்ந்து அந்தக் கருவை விருத்திசெய்து, படமாக்கி , வண்டியின் பலகணித்திரையில், பனியிருள் பின்னணியில் திரையிட்டு மகிழ்ந்தோம்.


இடம் - உட்துறைமுக வீதி உவர்மலையை வந்தடையும் கடற்கரைச்சந்தி.

மாவீரர்தின கொண்டாட்டங்கள் அவ்விடத்தில் அமைந்திருக்கும் கலாச்சார மண்டபத்தில் மும்முரமாக நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
வீதியின் இருமருங்கிலும் சிவப்பு மஞ்சள் கொடிகள் கடற்கரைக்காற்றில் சலசலத்துக்கொண்டிருக்கின்றன.

திருக்கோணமலையைச்சேர்ந்த மாவீரர்களின் புகைப்படங்கள் மண்டபத்தினுள்ளே நிரை நிரையாய் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன.
அவற்றை பார்த்து , அவற்றுக்கு வணக்கம்செலுத்துவதற்காக வருகைதந்திருக்கும் மக்கள்கூட்டம் மைதானமெங்கும் அலைமோதுகிறது.

எழுச்சிப்பாடல்களின் ஒலி அம்மக்களின் முகமெங்கும் வீரமிகு பெருமையை படரவிட்டிருக்கிறது.

உட்துறைமுக வீதி வழியாக போராளிகள் பல பணிகளை சுமந்தவர்களாய் அங்குமிங்கும் நடமாடிக்கொண்டிருக்கின்றனர்.

சற்றுத் தொலைவில் பேரூந்து நிறுத்தத்திற்கு அருகில் ஒரு மூதாட்டி கையில் பிளாஸ்டிக் பையுடன் உட்கார்ந்திருப்பது அப்போராளிகளின் கண்களில் அடிக்கடி பட்டவண்ணமிருக்கிறது.

போராளிகளில் ஒருவராய் கமரா அம்மூதாட்டியை நெருங்குகிறது.

மூதாட்டியின் முகத்தில் ஏமாற்றத்தின், இயலாமையின் சோகச்சுவடுகள்.

சோர்வு.

விரக்தி.

இவ்வுருவமைப்பு, போராளியை மூதாட்டியிடத்தில் மேலும் நெருங்கச்செய்கிறது.

"அம்மா, ஏன் இதில இருக்கிறீங்க? எங்க போகோணும்?"


"குச்சவெளிக்குப் போகோணும் தம்பி... ஆனா நான் இண்டைக்கு போகப்போறதில்ல."

" ஏன் பஸ் வரப் பிந்துதா அம்மா?... மாவீரர் தினத்துக்குத்தானே வந்தனீங்க? தேவையெண்டா சொல்லுங்க உங்கள கொண்டுபோய்விட ஏதாவது ஒழுங்கு செய்யலாம்"

"வேணாம் தம்பி .. மகன்ட போட்டோவை பார்க்காம நான் இங்கயிருந்து போகமாட்டன்."

"யார் உங்கட மகன்?"

" பாத்து பதினெட்டு வருஷமாச்சு தம்பி. இயக்கத்துக்குப் போகமுந்தி பாத்தது. அதுக்குப்பிறகு செத்துப்பொயிட்டான் எண்டுதான் தெரியும்.... கடைசியா எப்பிடி இருந்தான் எண்டுகூட தெரியாது.... அவன்ட போட்டோவை பார்க்காம நான் போகமாட்டன்"


" கவலப்படாதீங்க அம்மா. உங்க மகன் இந்தமாவட்டத்தை சேர்ந்தவர்தானே> அப்ப கட்டாயம் உள்ளுக்குள்ள அவருடைய படமும் இருக்கும். உள்ள போகமுடியாம இருக்கா..?"

"உள்ளுக்குள்ள மூண்டுதரம் சுத்திப்பாத்திட்டன் . அவன்ட போட்டோவும் இல்ல பேரும் இல்ல..."

" வடிவா பாத்தீங்களா அம்மா?... நான் வேணுமெண்டால் திரும்ப ஒருக்கா தேடிப்பாத்து வந்து சொல்லுறன்.... உங்கட மகன் எப்ப வீரச்சாவு?"

" எண்பத்தஞ்சில தம்பி சாவகச்சேரியில செத்துப்போனான்"

"எண்பத்தஞ்சிலயா? .... சாவகச்சேரியில எந்தமோதல் எண்டு தெரியுமா?"





"ஏதோ பொலிஸ் ஸ்டேசன் அடிக்கக்குள்ளயாம் எண்டு கேள்விப்பட்டேன்"




கமரா மௌனமாய் மாவீரர்படங்கள் அணிவகுத்திருக்கும் மண்டபத்தை நோக்கித் திரும்பியது.



கமராவாய் நின்ற போராளியுடன் கூட வந்தபோராளியின் கேள்வி பின்னணியில் கேட்க வெளிச்சம் மங்குகிறது....






" மகன் எந்த இயக்கம் அம்மா?...."


------------------------------

------------


தமிழீழத்தில் நிகழும் எல்லா வைபவங்களிலும் நாம் தொடக்கத்தில் மாவீரர்களுக்கு அகவணக்கம் செலுத்துவதுண்டு.

இந்தவருட ஆரம்பத்தில் கொழும்பில் நடைபெற்ற திரு முத்து நெடுமாறன் அவர்களுடைய கணினிக் கருத்தரங்கின் தொடக்கத்தில் கூட இவ்வகவணக்கம் இடம்பெற்றது..

அப்பொதெல்லாம் மனதுள் சில பதில் தெரியா கேள்விகள் எழுந்துகொண்டேயிருக்கும்.
அந்நதக் கேள்விகளுக்கான பதிலை திருக்கோணமலையில் நடத்திய "பெயர்" சஞ்சிகையின் ஒவ்வொரு பொதுமக்கள் நிகழ்விலும் சொல்வதுண்டு.

"விடுதலைக்காய் உயிர்கொடுத்த அத்தனை போராளிகளுக்கும் இப்போது அகவணக்கம் செலுத்துவோம்"


இம்மூதாட்டியின் மகனை நாளைய சந்ததி மறந்துபோய்விடலாம்.
அவனைப்பற்றிய விபரம் மாவீரர் பதிவுகளில் இல்லை.

தங்கத்துரை குட்டிமணிக்குக்கூடவா இந்த நிலைமை ஏற்படக்கூடும்?



நானறிய திருக்கோணமலையிலிருந்து இயக்கத்துக்கு ஓடிய இளைஞர்களுக்கு தெரிந்ததெல்லாம் "சிங்களவனை திருப்பி வெட்டவேணும் " என்கிற வெறி தானேயொழிய எந்த இயக்கத்தில் போய்ச்சேரப்போகிறோம் என்பதல்ல.



சுடரவிருக்கும் நாளைய மாவீரர்தினத்துக்கு எனது வீரவணக்கங்கள்.
மாவ்வீரர்களான விடுதலைப்புலி வீரர்கள் உள்ளிட, விடுதலைக்காய் உயிர் நீத்த அத்தனை போராளிகளுக்கும் என் அகவணக்கங்கள்.

மக்களுக்கான பொதுவுடைமைத் தமிழீழத்தின் (இயலுமானால் தமிழீழ- சிறீ லங்கா பொதுவுடைமைக் கூட்டரசு) மலர்வுக்கான பயணத்திற்கும் அப்பயணத்தின் ராணுவத்தை தலைமைதாங்கி நடத்தும் சகோதரர் வே. பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளுக்கும் என் வாழ்த்துக்கள்.



வெல்க விடுதலைப்பயணம்....!!!!!!

June 22, 2007

படிக்கும் உரிமை (புனைகதை)

ஆங்கில மூலம் - ரிச்சர்ட் ஸ்டால்மன்
தமிழில் - மு.மயூரன்

(இத் தமிழாக்கம், நூலகம் திட்டத்திற்குப் படையல்...)

கலைச்சொற்கள்:

இடைத்தவணைச் செயற்றிட்டம் - Mid-Term Project
மென்பொருள் பாதுகாப்பு அதிகாரசபை - Software Protection Authority
காப்புரிமைக் கண்காணி - copyright monitor
உரிமப்படுத்தல் நடுவம் - Central Licensing
உசாவல் - Reference
வழுத்திருத்தி - Debugger
ஆணைத்தொடர் - code
இறுவட்டு - CD
தரவிறக்கம் - Download
நிரலாளர் - Programmer
தீயரண் - Firewall
கருனி - kernel
இயங்குதளம் - Operating System





*ஆசிரியரின் இப்படைப்பு Communications of the ACM இன் பெப்ரவரி 1997 வெளியீட்டில்(Volume 40, Number 2) இடம்பெற்றது.
* தைக்கோ என்பது நிலவில் காணப்படும் கிண்ணக்குழிகளில் பரப்பால் பெரிதான ஒன்று.

---

(2096 இல் நிலாநகரில் வெளியிடப்பட்ட "தைக்கோவுக்கான பாதை" என்ற, நிலவுப்புரட்சியின்போது நடந்த சம்பவங்கள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு நூலிலிருந்து... )


டான் ஹால்பர்ட் டை பொறுத்தவரைக்கும் தைக்கோவுக்கான பாதை, கல்லூரியில் அவனுடைய கணினியை - லிசா லென்ஸ் இரவல் கேட்டபோது - ஆரம்பிக்கிறது.

அவளுடைய கணினி பழுதாய்ப்போய்விட்டது. இன்னொன்றை இரவல் வாங்காவிட்டால் இடைத்தவணைச் செயற்றிட்டத்தில் அவள் தோல்வியடைய நேரும். டானைத்தவிர இதனை அவள் துணிந்து கேட்பதற்கு வேறு யாரும் இல்லை.

இது டானின் நிலையைத் தர்மசங்கடமாக்கிவிட்டது. அவனுக்கென்னவோ அவளுக்கு உதவவேண்டியிருந்தது. ஆனால் தன்னுடைய கணினியை இரவல் கொடுத்தால் அவனுடைய புத்தகங்களை அவள் படித்துவிடக்கூடும்.

மற்றொருவரை உங்கள் புத்தகங்களை வாசிக்கவிட்டமைக்காகப் பலவருடங்கள் சிறைவாழ்க்கைக்கு போகவேண்டியிருக்கும் என்ற உண்மை ஒரு புறமிருக்க, அவள் தனது புத்தகங்களைப் படித்துவிடக்கூடும் என்ற நினைப்பே அவனை முதலில் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

எல்லோரையும் போல அவனும் தொடக்கப்பள்ளியிலிருந்தே புத்தகங்களை மற்றவரோடு பகிர்தல் தவறானதென்றும் கெட்ட பழக்கம் என்றும், கொள்ளைக்காரர்கள் மட்டுமே செய்யக்கூடிய செயல் என்றும் கற்பிக்கப்பட்டிருந்தான்.

கூடவே 'மென்பொருள் பாதுகாப்பு அதிகாரசபை' அவனை பிடிக்கத்தவறுவதற்கு அதிகம் வாய்ப்பு இருக்கவில்லை. ஒவ்வொரு புத்தகமும் காப்புரிமைக் கண்காணியொன்றினைத் தம்மகத்தே கொண்டிருக்கும் என்றும், யாரால், எப்போது, எங்கே அந்தப்புத்தகம் படிக்கப்படுகிறது என்ற தகவலை 'உரிமப்படுத்தல் நடுவத்திற்கு' அறிவிக்கும் என்றும் கற்றிருக்கிறான் (படிக்கும் கொள்ளைக்காரர்களைப் பிடிப்பதற்காக மட்டுமல்லாது ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட விருப்புவெறுப்புக்கள் பற்றிய தகவல்களைச் சில்லறை வர்த்தகர்களுக்கு விற்கவும் இந்த வசதியை அவர்கள் பயன்படுத்தினார்கள்).

அடுத்த தடவை அவனது கணினி வலையமைப்பில் இணைக்கப்பட்டதுமே நடுவம் இதனைக் கண்டுபிடித்துவிடும். கணினியின் உரிமையாளன் என்ற வகையில் நடந்த குற்றத்தினை தடுக்க முயலாமைக்காக கடுமையான தண்டனையினை அவன் பெற வேண்டியிருக்கும்.

உண்மைதான், அவனுடைய புத்தகங்களைப் படிக்கும் நோக்கத்தினை லிசா அவசியமாகக் கொண்டிருக்கவில்லைதான். தன்னுடைய இடைத்தவணைத் தேர்விற்கு எழுதுவதற்கு மட்டுமே அவளுக்கு அந்தக் கணினி தேவைப்பட்டிருக்கக் கூடும். ஆனால், அவள் நடுத்தரவர்க்கக் குடும்பம் ஒன்றிலிருந்து வந்தவள் என்பதையும் புத்தகம் வாசிப்பதற்கான கட்டணங்கள் ஒருபுறமிருக்க, அவளுடைய பாடக்கட்டணங்களைச் செலுத்துவதற்கே சிரமங்களை எதிர்நோக்குபவள் என்பதையும் டான் அறிந்திருந்தான்.

அவனுடைய புத்தகங்களைப் படிப்பது மட்டுமே அவள் பட்டம்பெறுவதற்கான ஒரே வழியாகக்கூட இருக்கக்கூடும். இந்த சூழநிலையை அவன் புரிந்துகொண்டான். அவனே தான் வாசித்த ஆய்வுக்கட்டுரைகள் அனைத்துக்கும் பணம் செலுத்துவதற்குக் கடன்பட வேண்டியிருந்தது. (செலுத்தப்பட்ட பணத்தின் 10% அந்த ஆய்வுக்கட்டுரைகளை எழுதிய ஆய்வாளர்களை சென்றடையும். கல்வித்தகைமை ஒன்றினை இலக்காகக்கொண்டவன் என்ற வகையில் டான், தனது சொந்த ஆய்வுக்கட்டுரைகள் அடிக்கடிப் படிக்கப்படும் பட்சத்தில் கடன்களை அடைத்துவிடுவதற்கு தேவையான பணத்தை அவை பெற்றுத்தரக்கூடும் என்று எதிர்பார்க்கமுடியும்).



எவர் வேண்டுமானாலும் நூலகங்களுக்குச்செல்லக்கூடிய, கட்டுரைகளை ஏன், புத்தகங்களிக்கூட காசெதுவும் கொடுக்காமல் வாசிகக்கூடிய காலமொன்று முன்னொருபோது இருந்தது என்பதை பின்னாட்களில் டான் அறிந்துகொண்டான். அரசாங்கத்தின் நூலக மானியம் இல்லாமலேயே ஆயிரக்கணக்கான பக்கங்களை படித்த சுயாதீனமான அறிஞர்கள் அப்போது இருந்திருக்கிறார்கள். ஆனால் 1990களில் வர்த்தக ரீதியான மற்றும் இலாபநோக்கற்ற வெளியீட்டாளர்கள் படிப்பதற்கான கட்டணங்களை அறவிட ஆரம்பித்துவிட்டார்கள். 2047ம் ஆண்டுவாக்கில் புலமை இலக்கியங்களை இலவசமாக பொதுமக்களின் உசாவலுக்கு வழங்கிய நூலகங்கள் எல்லாம் கனவாய்ப் பழங்கதையாய்ப்போயிற்று.

மென்பொருள் பாதுகாப்பு அதிகார சபையையும், உரிமப்படுத்தல் நடுவத்தையும் ஏய்ப்பதற்கான வழிகள் அப்போது இருக்கத்தான் செய்தன். அவை சட்டவிரோதமானவையாக இருந்தன.

டானுடன் மென்பொருள் வகுப்பில் கூடப்படித்த ஃப்ராங்க் என்பவன் சட்டத்திற்குப்புறம்பான வழுத்திருத்தி மென்பொருள் ஒன்றினைப் பெற்று வைத்திருந்தான். புத்தகங்களைப்படிக்கும்போது பதிப்புரிமைக் கண்காணி ஆணைத்தொடர்களை தவிர்த்து ஏய்ப்பதற்காக அதனை பயன்படுத்தினான். ஆனால் அவனோ ஒருதொகை நண்பர்களுக்கு அதைப்பற்றிச் சொல்லியிருந்தான். நண்பர்களில் ஒருவன் மென்பொருள் பாதுகாப்பு அதிகாரசபைக்கு அவனைப் போட்டுக்கொடுத்துவிட்டான் (மிகுதியான கடன் பிரச்சினைகள் மாணவர்களை இப்படியான துரொகச்செயல்களுக்கு இட்டுச்செல்கிறது). 2047 இல் ஃப்ராங்க் சிறையிலடைக்கப்பட்டான். கொள்ளைக்காரத்தனமாக படித்ததற்காக அல்ல. மாறாக வழுத்திருத்தி மென்பொருள் ஒன்றை வைத்திருந்ததற்காக.


யார்வேண்டுமானாலும் வழுத்திருத்தி மென்பொருட்கருவிகளை வைத்திருக்கக்கூடிய காலமொன்று முன்னொருபோது இருந்தது என்று டான் பின்னாட்களில் அறிந்துகொண்டான். இறுவட்டில் பெற்றுக்கொள்ளக்கூடியதாக அல்லது இணையத்திலிருந்து தரவிறக்கக்கூடியதாக ஏன், இலவச வழுத்திருத்தி மென்பொருட்கருவிகள் கூட அக்காலங்களில் இருந்திருக்கிறது.

ஆனால் சராசரிப் பயனர்கள் காப்புரிமைக் கண்காணிகளை ஏய்த்தோடுவதற்கு அவற்றை பயன்படுத்தத்தொடங்கவே நீதிபதியொருவர் நடப்பில் இதுதான் அவற்றின் முதன்மைப்பயன்பாடாக மாறிப்போய்விட்டது என்று தீர்ப்பளித்தார். இது வழுத்திருத்திகளை சட்டவிரோதமாக்கியது. வழுத்திருத்திகளை உருவாக்கிய மென்பொருளாளர்கள் சிறைக்கு அனுப்பப்பட்டனர்.


நிரலாளர்களுக்கு இப்போதும் வழுத்திருத்திகள் தேவையாயிருப்பதென்னவோ உண்மைதான். ஆனால் வழுத்திருத்தி விற்பனையாளர்கள் 2047 இல் குறிப்பிட்ட எண்ணிக்கையான நகல்களை மட்டுமே உற்பத்தி செய்தனர். அதுவும் உத்தியோகபூர்வமாக உரிமம் பெற்ற, ஒப்பந்தம் செய்துகொண்ட நிரலாளர்களுக்கு மட்டுமே. மென்பொருள் வகுப்பில் டான் பயன்படுத்திய வழுத்திருத்தி மென்பொருள் சிறப்புத் தீயரண்களுக்குப்பின்னால் வைக்கப்பட்டிருந்தது. அதனால் அவற்றை வகுப்பு பயிற்சிகளுக்கு மட்டுமே பயன்படுத்தக் கூடியதாக இருந்தது.

மாற்றியமைக்கப்பட்ட கருனி ஒன்றினை நிறுவிக்கொள்வதன் மூலமாகவும் காப்புரிமைக் கண்காணியினை ஏய்த்தல் சாத்தியமாக இருந்தது. இந்த நூற்றாண்டின் ஆரம்பங்களில் இருந்த கட்டற்ற கருனிகள், ஏன் கட்டற்ற இயக்குதளங்களைப்பற்றிக்கூட அவ்வப்போது டான் அறிந்துகொண்டான். ஆனால், அவை சட்டவிரோதமானவை என்பதனால் மட்டுமல்ல, உங்கள் கணினியின் மூலக்கடவுச்சொல்லை அறியாமல் - வழுத்திருத்திகளைப் போலவே - அவற்றையும் கணினியில் நிறுவிக்கொள்ள முடியாது என்பதாலும் அவற்றை உங்களால் பயன்படுத்த முடியாது. அத்தோடு உளவுத்துறையோ மைக்ரோசொஃப்ட் ஆதரவுச்சேவையோ உங்களுக்கு அந்தக்கடவுச்சொல்லை சொல்லப்போவதுமில்லை.

அவ்வளவு எளிதாக லிசாவுக்கு தன்னுடைய கணினியை இரவல் கொடுத்துவிட முடியாது என்ற முடிவுக்கு டான் வந்தான்.

ஆனால் அவனால் அவளுக்கு உதவ மறுக்க இயலவில்லை. ஏனென்றால் அவன் அவளை நேசித்தான். அவளோடு பேசக்கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பமும் அவனை பூரிப்பால் நிரப்பிவிடுகிறது. அத்தோடு உதவி கேட்பதற்கு அவள் அவனைத்தான் தெரிவு செய்தாள். அவளும் அவனை நேசித்தாள் என்று இது அர்த்தம் தரமுடியும்.

இவற்றை எல்லாம் விட நினைத்துக்கூடப்பார்க்கமுடியாத ஒரு வேலையைச்செய்து இந்த தர்மசங்கடத்திற்கு டான் தீர்வுகண்டான். அவளுக்கு கணினியை இரவல் கொடுத்ததோடு தன்னுடைய கடவுச்சொல்லையும் அவளுக்குச் சொல்லிவிட்டான்.

இதுவும் குற்றமாகவே இருந்தபோதும் மென்பொருள் பாதுகாப்பு அதிகாரசபை தன்னியக்கமாக இதனை கண்டறியாது. லிசா அவனைப் பற்றி தகவல்கொடுத்தால் மட்டும்தான் அவர்களால் கண்டுபிடிக்கமுடியும்.

தன்னுடைய சொந்தக் கடவுச்சொல்லை அவன் லிசாவுக்கு கொடுத்துவிட்டான் என்பதை எப்போதாவது கல்லூரி கண்டுபிடிக்குமேயானால் - அவள் அதனை எதற்கு பயன்படுத்தினாள் என்பதெல்லாம் எடுபடப்போவதில்லை - மாணவர்கள் என்ற வகையில், தொலைந்தார்கள் இருவரும்.

மணவர்களின் கணினிப் பயன்பாட்டைக் கண்காணிக்கும் கல்லூரியின் எந்த வழிமுறைகளிலும் செய்யப்படும் தலையீடுகள் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு இட்டுச்செல்லும் என்பது கல்லூரியின் கொள்கையாக இருந்தது. பாரதூரமான வேலையொன்றினை நீங்கள் செய்தீர்களா இல்லையா என்பதெல்லாம் அங்கே எடுபடப்போவதில்லை. நிர்வாகிகள் உங்களைச் சோதிப்பதை சிரமமாக்கியமைதான் அங்கே குற்றம். நீங்கள் ஏதோ மறைவாகச் செய்கிறீர்கள் என்பதாகவே இது அர்த்தப்படும் என்றே அவர்கள் எடுத்துக்கொள்வார்கள். அது என்ன என்பதை தெரிந்துகொள்ளும் தேவை அவர்களுக்கு இல்லை.

வழக்கமாக இதற்கு மணவர்கள் கல்லூரியிலிருந்து வெளியேற்றப்படுவதில்லை. நேரடியாக அது செய்யப்படுவதில்லை. மாறாக அவர்கள் கல்லூரியின் கணினி முறைமைகளிலிருந்து தடை செய்யப்படுவர். இது இயல்பாகவே அவர்கள் பாடங்களிலெல்லாம் தோல்வியுறுதலில் வந்து முடியும்.

பெரும் எண்ணிக்கையான பல்கலைக்கழக மாணவர்கள் கணினியை பயன்படுத்த ஆரம்பித்தபோது, 1980 களிலேயே இம்மாதிரியான பல்கலைக்கழக கொள்கைகள் ஆரம்பித்தன என்பதை பின்னர் டான் அறிந்துகொண்டான்.

அதற்கு முன்பெல்லாம் பல்கலைக்கழகங்கள் மாணவர்களின் ஒழுக்க விஷயத்தில் வித்தியாசமான அணுகுமுறைகளைக் கையாண்டிருந்தன. பாரதூரமான விளைவுகளை உண்டாக்கிய நடவடிக்கைகளுக்கே தண்டனை வழங்கப்பட்டது. சந்தேகத்தின்படியெல்லாம் இல்லை.

மென்பொருள் பாதுகாப்பு அதிகாரசபைக்கு லீசா டானைப்பற்றி தகவலளிக்கவில்லை. அவளுக்கு உதவுவதென அவன் எடுத்த முடிவு அவர்களை திருமணத்தில் கொண்டுபோய் சேர்த்தது.

அத்தோடு சிறுவர்களாய் இருந்தபோது "கொள்ளையடிப்பது" பற்றி தங்களுக்கு கற்பிக்கப்பட்டவை மீதான கேள்விகளை நோக்கி அவர்களை உந்தியது.

காப்புரிமையின் வரலாற்றினைப்பற்றியும் , சோவியத் யூனியனைப்பற்றியும் அதன் "நகலெடுத்தல்" மீதான கட்டுப்பாடுகள் பற்றியும், ஐக்கிய அமெரிக்க நாடுகளின் மூல அரசியல் யாப்பினையும் கூட அந்த சோடி தேடிப்படிக்க ஆரம்பித்தது.

தம்மைப்போலவே மென்பொருள் பாதுகாப்பு அதிகாரசபையின் நீள் கரங்களைத்த்தாண்டி பறந்து சென்ற மற்றவர்கள் குடியிருந்த நிலவிற்கு அவர்கள் குடிபெயர்ந்தனர். தைக்கோ எழுச்சி 2062 இல் ஆரம்பமானபோது, அண்டந்தழுவிய "படிப்பதற்கான உரிமை" அதன் அடிப்படை நோக்கங்களில் ஒன்றாக ஆகியது.

June 10, 2007

நந்தினி சேவியரின் சத்திர சிகிச்சைக்கு பண உதவி

தற்போது திருக்கோணமலையில் வசித்துவரும் அறியப்பட்ட சிறுகதை எழுத்தாளரும் செயற்பாட்டாளருமான திரு நந்தினி சேவியர் அவர்கள் மாரடைப்பு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

அவரது நோயின் தீவிரம் கருதி இன்னமும் ஒரு வாரகாலத்துக்குள் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.

அவரைத் தனிப்பட அறிந்தவர்கள் அவரது பொருளாதார நிலை பற்றியும் தெரிந்தவர்களாயிருப்பர்.
அவருக்குப் பண உதவி தேவைப்படுகிறது.
சத்திர சிகிச்சைக்குத் தேவையான பணம் மொத்தம் ஐநூறாயிரம் ரூபாய்கள் (500,000)

அன்னாரை அறிந்த நெருங்கிய நண்பர்கள் இந்த உதவியைச் செய்ய விரும்பினால் கீழ்வரும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு அவருடன் உரையாடவும்.

+94 26 222 1415

தொடர்புகொள்ள இயலாமற்போனாலோ அல்லது மேலதிக கேள்விகள் இருந்தாலோ இங்கே பின்னூட்டமிடுங்கள்.
அல்லது என்னை மின்னஞ்சலில் தொடர்புகொள்ளுங்கள்.
mmauran@gmail.com

June 2, 2007

மரியா எனப்பட்ட மேரி

மூலக்கதை (சிங்களம்) - மஞ்சுள வெடிவர்த்தன.
ஆங்கிலத்தில் - றண்பண்டா செனவிரத்ன
தமிழில் - மு.மயூரன்



மரியாவின் கன்னிமையை அழித்துவிட்ட எம் புணர்ச்சி இப்பொழுதுதான் முடிவுற்றது.

தொடர்ந்தும் அவள்மீது படுத்தேயிருந்தேன்.
வியர்வையின் ஈரத்தில் எம்மிருவர் உடல்களும் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கிடந்தன.

அவளது யோனித்துவாரத்தினுள்ளிருந்து நழுவிக்கொண்டிருந்தது என் ஆண்குறி.
சூடாய் வெளியேறும் சுவாசத்தினால் என் வியர்வையின் ஈரத்தை உலர்த்திக்கொண்டிருந்தாள்.

ஒருமுறை கட்டிலில் முழங்கால்களை ஊன்றி கால்களை மடித்து என் மீது குந்தியிருந்தவண்ணம் மரியா முனகத்தொடங்கினாள்.

முகத்தைத் திருப்பிக்கொண்டேன். கண்கள் மூடிக்கொண்டன. இருள் என்னைச் சூழலாயிற்று.


---


ரோம்நகரம். Pharao காலம்.

ஒரு சிறைச்சாலையில் என்னுடல் வைப்பிடப்பட்டிருந்தது. நான்கு பாரிய கற்சுவர்களினால் சூழப்பட்ட அந்த மட்டுமட்டான இடத்தினுள் மூர்ச்சையின் வெவ்வேறு நிலைகளில் ஏறத்தாழ இருபது கைதிகள் வரை இருந்தனர்.

ஓரிடத்தில் சுவாசத்தொகுதி பலவீனமடைந்திருந்த ஒருவரின் ஓலம்.
மற்றோரிடத்தில் "யெகோவா" வை நோக்கிய "பா...பா.." தொழுகை ஓசை.
பிறிதோரிடத்தில் வீணீர் வடித்தபடி ஒருவர்.
இருந்தாற்போல் ஒரு முனகல் சத்தம் எழும்.
பின் மெல்ல மெல்ல அவ்வொலி கரைந்து மறையும்.

இவ்வொலிகளின் கலவையைக் கவனித்தவாறே இடதுபுறச்சுவரின் மேற்பகுதியிலிருந்த சிறு துவாரத்தில் என் பார்வையை நிலைப்படுத்தியிருந்தேன்.

அதனூடு சூரிய வெளிச்சம் மெல்ல மெல்லக் கசிந்துகொண்டிருந்தது.
இருளில் கலங்கியிருந்த என் கண்கள், அச்சிற்றொளிப் பொட்டின் கட்டுக்குள் அயரலாயிற்று.

அப்போதுதான் அவ்விசித்திரமான கனவு பிறந்தது.


முகில்களற்ற இரவின் வெறுவான வெளியெங்கும் தாரகைகள் மினுங்கிக்கொண்டிருந்தன.

திடீரென அப்பெருங்கூட்டத்தினின்று பிரிந்து சிதறிய தனித் தாரகையொன்று என் கவனதை ஈர்க்கத்தொடங்கியது.

அது நிலாவினை அண்மித்தபோது வால் ஒன்றை உருவாக்கிற்று. அவ்வால் நீண்டு வளர்ந்து செல்லலாயிற்று. அந்நீள்வாலின் நுனி ஒரு சுருக்குக் கயிறாக மாறி என் கழுத்தில் விழுந்து மெல்ல இறுக்கத்துவங்கிற்று.

மரணபயத்தில் என்னால் முடிந்தமட்டும் அலறத்தொடங்கினேன்.

ஆனால் எச்சிறு ஓசையும் என் வாயுள்ளிருந்து வெளிவரவில்லை.


தலைமீது பட்ட ஒரு கைதியின் பாதத் தொடுகையில் என் கண்கள் திறந்தன.

இன்னமும் கழுத்தை என் கைகளால் பிசைந்தபடி மௌனமாக அலறிக்கொண்டிருந்தேன்.

ஒளியின் ஊசிக்கதிர்கள் சுவர்த்துவாரத்தினூடு ஒழுகிக்கொண்டிருந்தன.

அச்சிறைக்கூடத்தின் ஒவ்வொரு பொருளையும் தொட்டு நகர்ந்தவாறிருந்தது வெளிச்சம்.

அக்கைதிகளிடையே ஒரு தலைவன் இருந்தான். மிடுக்கான இளைஞன். கனவுகளுக்கு விளக்கம் சொல்வதில் பிரபலமானவன்.


டோனார்த் எனுமிடத்தில் இரிபது லியூக்கர்களுக்காக சகோதரர்கள் அவனை விற்றுவிட்டதால் ஜோசப் எகிப்துக்கு வரும் வாய்ப்பினைப் பெற்றுக்கொண்டான்.


வாயிற்காப்போனும் மன்னன் "ஃபாரோ" வின் முதன்மைப் பாதுகாவலனுமாகிய "போதியர்" இன் மனைவியினுடைய 'கற்பை' களங்கப்படுத்தியதன்மூலம் அவன் பெரிய முட்டாள்த்தனத்தைச் செய்தான். அவளோடு பாலுறவு கொண்டமைக்காகச் சிறையிலடைக்கப்பட்டான்.

தானிருந்த இடத்திலிருந்து எழுந்துவந்து கம்பீரமாக என்முன் நின்று ஆழ்ந்த, மிடுக்கான குரலில் எனை விளித்தான் ஜோசப்.


"உன் கனவைத் தெளிவாய் விபரி, அதன் விளக்கத்தை நான் கூறுகிறேன்"

நடுங்கும் குரலில் என் கனவை அவனிடம் ஒப்பித்தேன்.

கண்களை மூடி அமைதியாய்ச் சில கணங்கள் தன் கைகளை உயர்த்தி வைத்துப் பின் தாழ்த்தினான்.

கண்களைத் திறந்து பேசத்தொடங்கினான்.

"உன் மூலம் ஓர் ஆண் குழந்தை பிறக்கவிருக்கிறது. மிக நிச்சயமாய் அவன் நாத்திகத்தின் உச்சத்திற்குப் போவான். அவன் எதிர்க் க்றிஸ்து"

கைதிகளின் இதய ஆழத்துள்ளிருந்த உணர்ச்சிகளின் கலப்பு அவர்கள் முகத்தைச் சாயமிட்டது.

தத்தம் இடங்களிலிருந்து கால்களை உயர்த்தினர்.

"முதலில் அவன் உன் மரணமாயிருப்பான். பின் மற்றவர்களிடத்தும் பயங்கரத்தைப் பரப்புவான். யாரும், எத்தகு முயற்சியாலும் அவனுடைய பிறப்பைத் தடுத்துவிட முடியாது".

அமைதியான குரலில் கனவை விபரித்து முடித்தான் ஜோசப்.

இவன்சொன்ன தகவல்களை கேட்டுவிட்டு எல்லாக் கைதிகளும் எழுந்தனர்.

என்னைச்சுற்றி வட்டமிடத்தொடங்கினர்.

நான் அதிர்ச்சியுற்றேன்.

என் பிரக்ஞை பயத்துள் அமிழ்ந்தது.

மெதுவாய் ஆண்டவரை அழைத்தேன்.

மெல்ல அம்மனித வட்டம் சுருங்கத்தொடங்கியது.

அனைவர் பார்வைகளும் என் ஆண்குறி மீது திரும்பின.

எல்லோரும் ஒரே அசைவில் என் மீது குறி வைத்துத் தாக்கத்தொடங்கினர்.

தோளோடு தோள் பொருதத்தொடங்கினர்.

எனது ஆண்குறியைத் தொடுவதற்காகவோ அல்லது பிடுங்கி எறிவதற்காகவோ பயங்கரப் போராட்டம் விளைந்தது.

தரைமீது வீழ்ந்து போராடினேன்.
அந்நேர இடைவெளியில் அவர்களுக்குபின்னாலிருந்து யாரோ வந்து என் கால்களுக்கிடையே கைவைத்து ஆண்குறியைப் பற்றி இறுக்கினான்.

நான் மண்புழுவென நெளியவாரம்பித்தேன்.
முடிந்தமட்டும் அலறினேன்.

இவ்வலறல் ஓலமும் போராட்டமும் தொடர்ந்தவண்ணமேயிருந்தது - என் தலை கட்டில் தலைமாட்டில் மோதும்வரை.

என் கைகள் என் ஆண்குறியை நன்கு இறுக்கிப் பற்றியிருந்தது.


---

மரியா தொழுகைப்பீடத்திற்கு முன்னால் முழு நிர்வாணமாக முழந்தாளிட்டு நின்றிருந்தாள்.
'கன்னி மேரியின்' அருள்நிறைந்த பார்வை, அளவற்ற அனுதாபத்துடனும் கட்டற்ற கருணையுடனும் நிலைத்திருந்தது.

மரியாவுக்கான ஒரு துளிக் கண்ணீர் கன்னிமேரியின் கண்களில் துளிர்த்தது.

மென்நீல - வெண்மை நிற களிமண் சிலை மீது வழிந்து உருண்டது.

மரிய இவை எதனையும் காணவில்லை.
அவள் பார்வையாலும் விரல்களாலும் தரையைத் துடைத்துக்கொண்டிருந்தாள்.

அவளது கூந்தல் ஒற்றை அலையாய் முதுகில் வழிந்து பிட்டங்களின் நடுப்பகுதிரை ஊடறுத்து நீண்டு கிடந்தது.

அவளின் மெல்லிடை, கவர்ச்சிகரமான இடுப்பை எடுப்பாய்க் காட்டிற்று.

அவள்மீது பார்வையைப் படரவிட்டு கட்டில் தலைமாட்டில் சாய்ந்தவாறே சிகரெற் ஒன்றைப் பற்றவைத்து நீண்டடர்ந்த புகைப்படலத்தால் என் நுரையீரலை நிரப்பினேன்.

என் தோள் மீது யாரோ தட்டுவதாய் உணர்ந்து திரும்பினேன்.
நீண்ட கரும் மயிர்களால் மூடப்பட்ட உடல். சாத்தான்.
அவனுடலை மூடியிருந்த ஒரேயொரு துணிப்பொருள் ஜட்டி மட்டுமே.

மெல்லிய பொல் ஒன்றை தன் கையில் இறுக்கிப் பற்றியிருந்தான். நெருப்புக் கேட்டான். என் சிகரெற்றை எடுத்துக்கொடுத்தேன். தன் பொல்லைப் பற்றவைத்தான்.

சிகரெற்றைத் திருப்பித் தந்துவிட்டு மரியாவுக்கு அருகிலிருந்த சாய்மனைக்கதிரையில் சாய்ந்தபடியே என்னை நோக்கித் திரும்பினான்.

தோழமையோடு பல் தெரியப் புன்னகைத்தான்.

என் எண்ணங்கள் நகரத்தொடங்கின.

பார்வையை விலக்கி மேலே பேர்த்தேன்.
கூரையின்மீது ஓடு பிரிக்கப்படும் ஓசை கேட்டது.
இரண்டு கைகள் ஓடுகளைக் கழற்றிக்கொண்டிருந்தன.


கூரையின் துவாரத்தினூடு தூயவெண் சிறகுகளை விரித்தபடி ஒரு புனிதத் திருவுரு தோன்றிற்று.
அதன் உடல் முழுதும் பனிவெண் இறகுகளால் மூடப்பட்டிருந்தது.
சிறகுகளைப் பென்குவின் போல மடித்து வைத்துக்கொண்டு மரியாவின் நிர்வாண உடலின் முன்னால் நிதானித்து நின்றது.

நான் அதனை மிக இலகுவாக தேவதூதன் கப்ரியலாக இனங்கண்டுகொண்டேன்.

ஒளியின் தேவதைகளுக்கும் இருளின் சக்திகளுக்கும் இடையிலான தெய்வீகப்போர் எனக்கு மெல்லப் புலப்படலாயிற்று.
சாய்மனைக் கதிரையில் சாய்வில் தலைகீழாய் நின்றுகொண்டான் சாத்தான்.

தன் உரத்த பெருங்குரலின் இடிக்கூச்சலினால் மரியாவை விளித்து,

"என்னரும் மரியாவே, பெண்களுள் ஆசீர்வதிக்கப்பட்டவர் நீரே, நான் உம்மீது பிரியமாயிருக்கிறேன். என் முழு இதயத்தினதும் கட்டற்ற ஆசிகள் உமகே. ஆசீர்வதிக்கப்பட்ட உம் திருவயிற்றின் கனியாகிய நிகரற்ற பலம் பொருந்திய இப்படைப்பு 'எதிர்க்க்றிஸ்து' எனப் பெயர் பெறக்கடவது! ஏனெனில் இவ்வவவதாரபுருஷ, உலகினை அறத்தின் உயர்நிலைக்கு எடுத்துச்செல்லுவார். உலக மகக்ளை ரட்சிப்பார்!"

இனிய புன்னகை தவழும் முகத்துடன் சாத்தான் மீண்டும் அமர்ந்தான்.
மரியா மூர்ச்சித்து விழுந்தாள்.
என்னால் அவளருகில் செல்ல முடியவில்லை.
நான் கட்டிலோடு உறைந்துவிட்டிருந்தேன்.

தன் இறகுப் புதரினுள் கையை நுழைத்த கப்ரியல் ஒரு குடுவையை வெளியில் எடுத்து மரியாவின் முகத்தில் நீர் தெளித்தான்.

அவள் விழிகள் நர்த்தித்தன.
கண் விழித்துச் சுற்றும் முற்றும் பார்த்தாள்.
திடீரென கப்ரியலின் மடியிற்குத் தாவியவளாய் முனகலாய் கேட்டாள்,

"ஓ! மாண்புமிகு கப்ரியல்!
கடவுளுக்கு மிகவும் விசுவாசமானவர்களும் இந்தப் பாழுங்கிணற்றில் தள்ளப்படுவது ஏன்?"

இதுவரையில்லா இனம்புரியாத உணர்ச்சிகளுடன் மரியாவை மடியில் வைத்திருந்த கப்ரியலின் முகம் சிவக்கலாயிற்று.
அவன் ஆழ்ந்த குழப்பத்துக்குள்ளாகியிருந்தான்.

என் நிர்வாண உடல் சற்று வியர்வை குளித்தது.

உதடுகள், வாய், தொண்டை எல்லாம் வெடிப்புறுவதை நான் உணர்ந்தேன்.

திடீரென முன்னால் பாய்ந்து கப்ரியலை நிலத்தில் தள்ளி வீழ்த்தினான் சாத்தான்.
பற்றியெரியும் கோபத்துடன் கப்ரியல் சாத்தான் மீது பாய்ந்தான்.

"தெய்வீகப்போர்" வெடித்தது.

இருவரும் ஒற்றைக் கட்டாய் உருண்டார்கள்.

சாத்தான், கபிரியலின் கால்களை வாயுள் திணித்து, முறுக்கிச், சப்பி, விழுங்கினான்.
வாயுள்ளிருந்து குருதி வழிந்தது. கப்ரியல் வெறி பிடித்தவனாய் சாத்தானின் கால்களை மென்று விழுங்கினான்.
இப்படியாக ஒருவரை ஒருவர் கடித்துப் புசித்து ஈற்றில் புலப்படாமல் மறைந்தே போனார்கள்.


---


"மரியா" என இங்கு அழைக்கப்பட்ட போதிலும் அவளின் உண்மையான பெயர், "மேரி ஜசிந்தா டீ சில்வா" என்பதாகும்.

திருமணமாவதற்கு முன்பான அவள் பெயரின் "ஹாமர்" நீக்கப்பட்டு கணவன் பெயரான "ஜோசம் டீ சில்வா" வின் "டீ சில்வா" சேர்க்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பரின் பனிக்குளிரில் "Lady Garbus" தேவாலயத்தின் பின்புறமாகவுள்ள வாங்கில் சாய்ந்திருந்தவண்ணம் தோழிக்காகக் காத்திருந்தபோதே அவளை முதன்முதலில் பார்த்தேன்.

வெள்ளிக்கிழமை.
அதிக சன நெரிசலற்ற நேரமாக இருந்தமையால் மரியாவின் நீண்ட மன்றாட்டம் என் கவனத்தைக் கவர்ந்தது.

அவளின் பின்னே முழந்தாளிட்டு நின்ற பெண் அவளது மாமியார் என்று பின்னர் அறிந்துகொண்டேன்.

அவள் மன்றாட்டம் முடிந்து எழுந்தாள்.
அப்பாவித்தனமான அந்த முகம் முக்காடிடப்பட்டிருந்தது.

எவ்வாறு மாதாவின் பாதங்களை மும்முறை தொட்டு முத்தமிடுகின்றாள் என்பதைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

பிறகு தன் மாமியாரின் பக்கம் திரும்பாமலேயே தேவாலயத்தின் வாசலை நோக்கி நடந்தாள்.

டிசம்பர் காற்று, அவள் முக்காட்டினைக் காவிவந்து என் காலடியில் போட்டுச் சென்றது.

அவள் காற்றைச் சினந்துகொண்டு வரும் போது திருப்பிக் கொடுப்பதற்காக குனிந்து அதைக் கையில் வைத்துக்கொண்டு காத்திருந்தேன்.

அதுதான் எம் கண்கள் சந்தித்துக்கொண்ட முதல்முறை.



அவள் திருமணம் செய்துகொண்டு இப்பொழுது இரண்டு ஆண்டுகளாகிறது. இன்னமும் கன்னியாகத்தான் இருக்கிறாள்.

ஜோசப்பின் பாலியல் இயலுகைகள் பற்றிய உண்மைகளை கவனிக்கத்தவறிய அனைவரும் இவளை மலடியாகவே பார்த்தனர்.

கர்த்தர் மீது மிகுந்த பக்தி கொண்டவளாக இருந்தமையால் இத்தகு அவமானங்கள் பற்றி அவள் சிரத்தை எடுக்கவில்லை.

தொடர்ந்தும் வாழ்வதற்கான உறுதியுடையவளாயிருந்தாள்.

மாமியார் அவளை தேவாலயத்துக்கு அழைத்துவந்திருக்கும் சந்தர்ப்பத்திலும் கூட ஜோசப்பின் இயலாமைகளைக் காட்டிக் கொடுக்காமல் மெய்யான அண்டவரின் குழந்தை போல் எல்லாத் துன்பங்களையும் தாங்கிக்கொண்டாள்.

அவளது உயிரின் இருப்பு, ஆத்மார்த்தமாக ஆண்டவர் மீதான விசுவாசத்திலும் கர்த்தரின் வார்த்தைகளிலுமே கட்டுண்டிருந்தது.

அவளது கணவன் ஜோசப்பிற்கு இந்த உலகத்தில் கர்த்தரைத்தவிர வேறு எதுவும் கிடையாது.
அவனது உண்ணலும் குடித்தலும் எல்லாச்செயல்களும் கர்த்தரை நோக்கிய மன்றாட்டத்துடனேயே ஆரம்பிக்கும் என்று அவள் சொல்லிக்கொள்வாள்.
அவள் அவ்வாறு சொல்லியிருக்கக்கூடும் தான்.
ஏனெனில் "திருமணத்தின் பின் ஆணும் பெண்ணும் ஒரே மாம்சமாயிருப்பார்கள்" என்பது கர்த்தருடைய வார்த்தை.

ஜோசப் மரியாவின் ஆழ்ந்த காதலை உள்வாங்கிக்கொண்டிருக்கிறான். அதில் சில உண்மைகள் இருக்கக்கூடும்.

அவளது இத்தகு அர்ப்பணிப்பை யாரால் தட்டிக்கழித்துவிட முடியும்?
அதில் இன்னொரு விஷயம் என்னவென்றால், கர்த்தரின் வார்த்தையைத் தட்டிக்கழித்தல் பெரும் பாவமாகும்.

நானும் அவள் அர்ப்பணிப்பை மதிக்கின்றேன்.
நானும் அவள் காதலுக்கு இடமளித்தேன்.
அழகிய அவள் உடலைக் காதலித்தேன்.
நான் அழகிய அவள் உடலைக் காதலித்தேன்.

அப்போதிருந்து மேரி ஜசிந்தாவை நான் மரியா என அழைக்கலானேன்.


நீண்ட நாட்கள் கழிந்தபின் பிறகு எமக்கு அந்தத் தினம் - சுதந்திர நாள் - கைப்பட்டது.
ஒருவன் எதிர்பாராதவிதமாகத்தான் அந்தப் பரவசமூட்டும் வாய்ப்பைப்பெறுவான்.

அதிர்ஷ்டவசமாக நான் அந்த வாய்ப்பைப் பெற்றவனானேன்.

சொர்க்கத்தின் முழுமையும் என் முன்னே விரிந்தது.


---


இருவரும் அவளது வீட்டிலிருந்தோம்.

அவள் என்மேல் படர்வதற்கிடையில் என்மீது பரவசம் படர்ந்தது.

முதலில் என் முகத்தின் ஒவ்வொரு அங்குலத்திலும் வெறி பிடித்தவள் போல் முடிவிலி முத்தங்களைப் பதிக்கத்தொடங்கினாள்.

கொந்தளித்து மூச்சிரைத்துக் கொண்டிருந்தவளை என்னருகில் இழுத்துக் கட்டிலில் உட்காரவைத்து மெதுவாய்க் காதோரம் முணுமுணுத்தேன்.

"இண்டைய நாள எப்பவும் மறக்கேலாத நாளாக்கிறதெண்டா நீ இந்த நிபந்தனைக்கு உடன்படத்தான் வேணும். பயப்பிடாத!... வெக்கப்படாத! இத கர்த்தர் கூட ஒண்டுமே சொல்லாம அனுமதிப்பேர்"


அவள் தனது வலது கையை என் இடுப்பைச் சுற்றி இறுக்கி என் தோள் மீது தலை சாய்த்தாள்.

அவளுள் முட்டிமோதும் விரகதாப மூச்சின் ஓசையை நான் கேட்டேன்.

"இப்ப இருந்து இண்டைக்கு முழுக்க நாங்க உடுப்பே இல்லாம இருக்கோணும் சரியா?"

பரபரப்படைந்தவளாய்த் திருப்பிக் கேட்டாள்

"முழு நாளுமா? சாப்பிடக் குடிக்கக்குள்ளயும் கூடவா?"

"ம்.. எல்லாத்துக்கும் முதல் எனக்கு இப்ப ஒரு கோப்பை தேத்தண்ணி வேணும். அது கூட என் நிபந்தனைப்படிதான்."

இந்த யோசனையைக் கேட்டு, இந்த எதிர்பாராத ஒப்பந்தத்தால் மரியா மிகவும் குழப்பமுற்றாள்.
நான் அவளைச் சமாதானப்படுத்த முயன்றேன்.


"இந்த உலகத்தில யார உனக்கு ரொம்பப்பிடிக்கும்?"

மௌனமாயிருந்து என்னைப் படித்தாள்.
சில நிமிஷங்களுக்குப்பிறகு குழப்பம் களைந்து சொன்னாள்,

"நீங்கதான்"

"இல்ல நீ ஆண்டவரத்தான் ரொம்ப ரொம்ப விரும்பிறாய்"

நான் மெல்ல மெல்ல அவளை என் ஒப்பந்தத்தின் இறுதிக்கட்டத்திற்கு கொண்டு செல்ல முயன்றேன்.


"மரபுக்கு எதிரான இந்த உட்டுப்புக்களை கர்த்தர் விரும்ப மாட்டேர். அதாலதான் மனிசர உடுப்பில்லாம படைச்சேர். அதாலதான் தானும் உடுப்பில்லாம இருந்தேர்.
நிர்வாணம் தான் அவருக்குப் பிடிக்கும். எண்டபடியா நாங்களும் நிர்வாணத்த மதிக்கோணும். அவரத் திருப்திப்படுத்திறதெண்டா நாங்க இந்த நிபந்தனைக்குக் கட்டுப்பட்டாகோணும். "

இவ்வாறு பேசிக்கொண்டே அவள் கண்களை ஆராய்ந்தவண்ணம் அவளது ஆடைகளைக் களைந்தேன்.

ஒரு முயல் குட்டியைப்போல எல்லாவற்றுக்கும் பணிந்துபோனாள்.
வெட்கத்தில் சிவக்கலானாள்.

இறுதியில் மரியாவின் தேவதை நிகர்த்த அழகு என் பார்வையின் முன்னே முகிழ்ந்தது.

மரியா நிர்வாணமாயிருக்கவும் பழகிக்கொண்டாள்.

அம்மணமாய் சமையலறையினுள் நடந்து போகும்போது கூட அவளிதயம் மலர்ந்தது.

என் ஆடைகளையும் களைந்தவனாய் சிகரெற் ஒன்றினைப் பற்றவைத்துவிட்டுக் கட்டில் தலைமாட்டில் சாய்ந்தேன்.

சற்றைக்கெல்லாம் ஒரு தட்டில் தேநீர்க்கோப்பையை எடுத்துக்கொண்டு அறையினுள் வந்தாள்.

என் புன்னகைக்கும் கண்கள் அவள் உடலழகில் தோய்ந்தது.

தேநீரை மேசை மீது வைத்துவிட்டு திடீரென கட்டிலில் பாய்ந்து என் ஆண்குறியை அழுத்திக்கொண்டிருந்த தலையணையை உருவி என்மீது விட்டெறிந்தாள்.

சிரிப்பலைகள் சிதறிக் காற்றில் எதிரொலித்தது.

சிரிப்பின் கடலினுள் அவ்வறை மூழ்கி அமிழ்ந்து அடங்கிப்போயிற்று.

கட்டிலிலிருந்து இறங்கி நடந்து அவளருகில் போனேன்.

என்னிரு கைகளாலும் அவளை அள்ளிக் கவனமாய்க் கட்டிலில் போட்டேன்.

---

"இப்ப என்ன செய்யிறது?"

புன்னகைக்க முயற்சித்தவளாய் மரியா கேட்டாள்.

"நான் உண்டாகிட்டனெண்டால் ஜோசப்புக்கு தெரிஞ்சிரும்"

அவளுள்ளிருந்த பயம், பூரித்த சந்தோஷத்தால் துண்டுபடலானது.

உட்கார்ந்து அவள் நெற்றியில் முத்தமிட்டேன்.

மரியா வார்த்தைகள் இன்றி, தன் கண்களை என் கண்களில் நிலைப்படுத்திக் கண்களாலேயே என் பதிலை யாசித்தாள்.



"ஜோசப்பிட்ட சொல்லிடு, இந்தக் குழந்தைய
கர்த்தர் குடுத்தேர் எண்டு!"


_________


குறிப்பு: இக்கதையை 2002-2003 காலப்பகுதியில் மொழிபெயர்த்தேன். சுட்டும்விழி சஞ்சிகைக்காக அப்போது கொடுத்துவிட்டு பிறகு இந்தமுறை திருக்கோணமலை போனபோது திரும்ப வாங்கிவந்துவிட்டேன். இந்தக்கதையின் தேவை குறித்த தெளிவின்மையே காரணம். மொழிபெயர்த்தபோது சர்ச்சைக்குரிய விடயங்களின் பாலான ஈர்ப்பு அதிகமாக இருந்தது. இக்கதை இலங்கையில் பெரிய சர்ச்சைக் கிளப்பிய கதை. பாதிரியார் ஒருவர் இதற்கெதிராக வழக்குப்பொட்டு கதை தடை செய்யப்பட்டிருந்தது. அப்போது உழைத்து மொழிபெயர்த்த இந்தக்கதை வீணாகிப்போய்விடக்கூடாது என்பதற்காக அதனை வலைப்பதிவிடுகிறேன். ஒரு ஆவணப்படுத்தலுக்காக.